Friday, January 2, 2015

சர்வதேச நீதிமன்றில் தன்னை நிறுத்த சதி - மஹிந்த கவலை!

"யுத்தத்தை முடித்து இலங்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்தியமைக்காகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை வழங்கியமைக்காகவும் யாழ்தேவியை கொண்டு வந்தமைக்காகவும் என்னை சர்வதேச நீதிமன்றின் கூண்டில் ஏற்ற எதிரணியினர் முயற்சிக்கின்றனர்." - இவ்வாறு ஆளும் தரப்பின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். "பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைக்க முடியாது. 
இரவு 12 மணி வரை என்னுடன் இருந்து அப்பம் உண்டவர் என்னிடம் கூறாமலேயே மறுநாள் காலையில் எதிரணிப் பக்கம் மாறி எனக்கு எதிராகக் களமிறங்கினார். இவரை நம்பி எவ்வாறு நாட்டை பொறுப்புக் கொடுப்பது?" - என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார். நாவலப்பிட்டியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்குமாறு கூறியுள்ளேன். அத்துடன், அடுத்த காலப்பகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் நீர் வசதி வழங்கப்படும். எனவே, நாம் என்ன செய்யவில்லை என்றுதான் இனி கேள்வி எழுப்பப்படவேண்டும். அத்துடன், ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியயழுப்ப நாம் அனைவரும் பாடுபடவேண்டும். 
 
இதேவேளை, இன்று எனக்கு எதிராகவும் எனது குடும்பத்துக்கு எதிராகவும் சேறு பூசும் வகையில் கருத்துகளை வெளியிடுகின்றனர். எனது எந்தவொரு சகோதரரையும் நான் அரசியலுக்கு கொண்டுவரவில்லை. யுத்தத்தை முடிக்கக் கோட்டாபயவை மாத்திரம் அழைத்தேன். சேறு பூசி வாக்குபெறமுடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்துக்கொண்டு கல்வீச முற்படக் கூடாது.
 
சேறு பூசும் அரசியலில் ஈடுபடுவதற்கு எனக்கு விரும்பமில்லை. நாம் ஒருபோதும் வரலாற்றை மறக்கமாட்டோம். இனிவரும் காலப்பகுதி முக்கிய தருணமாகும். நாம் எமது பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை வழங்கவேண்டும். நாட்டை முன்நோக்கி அழைத்துச் செல்லவேண்டும். அதற்காக மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும். நான் இனவாதியோ அல்லது மதவாதியோ அல்லன்" - என்றார்.

No comments:

Post a Comment