ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார்.  அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரையும் தரிசிக்க தொடங்கினார்கள்.
தங்கள் குடும்ப பிரச்சனை, மனக்குறைகள் போன்றவற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்டனர். அவர்களிடம் உங்களுக்கு பேய் பிடித்து இருக்கிறது. அதை கட்டிப்பிடி வைத்தியம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்று கூறி பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.
இதனால் சாமியார் அந்த பகுதியில் பிரபலமானார். நாளுக்கு நாள் பெண்களின் வருகை அதிகரித்தது. சாமியாரின் சக்தி பற்றி அவரது உதவியாளர் சுப்பாரெட்டி நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தார். அதில் பில்லி, சூனியம், ஏவல், பேய், உடல் நலக்குறைவு போன்றவற்றை தீர்க்கும் அதிசய சாமியாரை சந்திக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இருந்தார்.
இதற்கிடையே போலி சாமியார் பற்றி போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. சாமியார் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மோசடி செய்வதாகவும் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் சாமியாரின் அறைக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். சாமியாரை ஜனவரி 7–ந்தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.  மேலும் அவரது நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் சாமியாரை மனநல மையத்தில் சேர்க்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர் மனநல மையத்தில் சேர்க்கப்பட்டார். போலி சாமியாரின் உதவியாளர் சுப்பா ரெட்டியும் கைது செய்யப்பட்டார். 
இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
No comments:
Post a Comment